தீரா உலா - Ⅲ
கதிரவன் தன் கதிர்களைக் கொண்டு, ஜன்னல் வழியாக, சுமார் இருபத்தைந்து இரட்டை ஜடை மடந்தைகளை ரசித்துக் கொண்டிருந்தான். கதிர்கள் வெப்பத்தைக் கிளப்பி, வியர்வை துளிகளை முத்துக்களாக முகத்தில் உருவாக்கி, பிரகாசித்துக் கொண்டிருந்தன. சில முத்துக்கள் பருக்களின் இடையில் உடைந்தன. சில முத்துக்கள் வழுவழுப்பான கன்னங்களில் ஸ்கேட்டிங் செய்துக் கொண்டிருந்தது. கதிரவன் மடந்தைகளை பிரகாசிக்கச் செய்ய, அவன் மேல் பொறாமை கொண்ட இளம் மாணவர்கள், ஓரக் கண்ணில் கோபமும், நேர் கண்ணில் சோகமும் கலந்து, வகுப்பு நடத்தும் இயற்பியல் ஆசிரியையின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். இரண்டாம் பெஞ்சின் ஓரமாக இருந்த சிறு சாக் பீஸ் துண்டை சாரு எடுத்தாள். அவளின் விரல்களின் வியர்வை மீது அந்த தூள்கள் ஒட்டிக் கொண்டது. சாக்கை கீழே வைத்து விட்டு விரல்களை சேர்த்து துடைத்தாள். அருகில் இருந்த யாழினி அதை பார்த்து புன்முறுவல் உதிர்த்தாள். இருவரும் மொழி இல்லாமல் பேச ஆரம்பித்தனர். புருவத்தை தூக்கி ‘என்ன?’ என்று அவள் கண்களில் வினா எழுப்பினாள். அவள் புருவத்தை குறுக்கி தலையை அசைத்து ‘ஒன்றுமில்லை’ என்று உணர்த்தினாள். ...