தீரா உலா- Ⅰ



     அவள் ஒரு முப்பத்தி ஏழு வயது, பேரிளம் பாட்டி. இருபது வருடங்களுக்கு முன்னர் இவ்வாறாக இளம் பாட்டிகள் ஜனித்து வந்தனர். சுவரம் லயம் தாளம் ஜதி  இதேதும் அறியாத ஆறுமாத குழந்தை அவளின் தாலாட்டில் மயக்க நிலையில் ததும்பிக் கொண்டிருந்தது. அது தான்  இசை என்று குழந்தையின் ஆழ் மனதில் பதிய ஆரம்பிக்கலானது. கருவறையிலிருந்த இருட்டும், கதகதப்பும் அந்த அறையில் குடிக் கொண்டிருந்தது. அந்த தொட்டிலின் ஆட்டம், அன்னை வயிற்றில் இருந்த  போது, அன்னையின் நடையால் ஏற்பட்ட ஆட்டம் போல இருந்தது அக்குழந்தைக்கு. கருவிலிருந்த போது மேலிருந்து தன் செவியை அடைந்த குரலை ஒத்த , ஒரு குரல் பாடல் பாடிக்கொண்டிருந்ததை அது கேட்டது. சொப்பன லோகத்தில் சஞ்சரிக்கலானது. அந்த நடுவயது பெண்ணின் இதழ்கள் 



காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் 
கண்மணி உன்னை நான் கருத்தினில் நிறைத்தேன்,

உனக்கே உயிரானேன் எந்நாளும் என்னை நீ மறவாதே!
நீ இல்லாமல் ஏது நிம்மதி.
நீதானே என் சந்நிதி! 


இந்த வரிகளை மொழிந்துக் கொண்டிருந்தது. கண்ணதாசன் வரிகளில் அவள் கணவனின் தாசி என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். அது வெறும் பாடல் வரிகள் அல்ல. அவள் வாழ்க்கையை பாடுவது போல இருந்தது. அந்த பிஞ்சு கண்மணியை கருத்தில் வைத்து, இன்னும் காதலை வளர்த்தாள். இறந்து போன கணவனோடு கனவுகளை எரிக்காமல், அந்த சிசுவின் வழியாக காதல் வளர்த்தாள். அவள் கணவனின் மீது காதல் கனவுகளால் உலா*  புனைந்தாள். அழியாத நிலையில் அந்த இலக்கியத்தை அவளின் பேத்தியிடம் பரிமாறிக் கொண்டிருந்தாள்.

காதல் இலக்கணம் அற்றது, இலக்கியம் மிகுந்தது. காதல் கொண்டு இலக்கியம் உருவாக்கலாம். அனால் நடைமுறையில் காதல் உருமாறும். அந்த குழந்தை வழியாக தன் காதலை உருமாற்றினாள். இலக்கணம் பாராமல்  இலக்கியம் ஆக்கினாள். தீரா கனாக்களை அந்த பிள்ளையிடம் ஊட்டி , தீரா உலாக்களை புனைய கற்றுக் கொடுத்தாள்.

காதலும் பாடலும் இணைந்து, தீரா கனாக்களாகவும், தீரா உலாக்களாகவும்  உருமாறிக் கொண்டிருக்கிறது.

தொடரும் உலா.....


உலா - சிற்றிலக்கிய வகையில் ஒன்று. மகளிர் காதல் கொள்வதையும் கருப்பொருளாகக் கொண்டு பாடப்படுவதே உலா இலக்கியம் ஆகும். 

Comments

Post a Comment

Popular posts from this blog

வல்லரசுகள் உண்மையாகவே வல்லரசு தானா?

திரு;மதி!

துயரம்